பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம்- அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு


பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம்- அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
x

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

மதுரை


பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

கணினி மயம்

மதுரை மண்டல சார்பதிவாளர்கள் சீராய்வு கூட்டம், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். துணை பதிவுத்துறை தலைவர் ரவீந்திரநாத், உதவி பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களின் பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பதிவுக்கு வரும் பொதுமக்கள் முந்தைய தினம் ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு பெற்றுக்கொள்ளும் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் வருகைதந்து, கால விரயமின்றி சுமார் 15 நிமிடத்திற்குள்ளாகவே பதிவு பணியை முடித்துக் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பதிவு தொடர்பான அனைத்து பணிகளும் கணினி வழியே மிக வேகமாக நடைபெறுகின்றன. பதிவு தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளும் கணினி வழியாகவே செலுத்தப்படுகின்றன. 100 ரூபாய் செலுத்த வேண்டி இருந்தாலும் அதனை ஏ.டி.எம். கார்டு மூலமாக செலுத்தும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

புகார் அளிக்கலாம்

பதிவுக்கு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டி உள்ளதால் அவர்கள் பதிவுக்காக சார் பதிவாளர் அலுவலகம் வரும்போது கையில் பணம் கொண்டு வரத் தேவையில்லை. சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரடி பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெறுவதில்லை. நடைபெற தேவையும் இல்லை. எனவே பதிவுக்கு வரும் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பணம் எடுத்து வர வேண்டாம்.

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் போது அங்கு அவர்கள் பெறும் சேவைக்காக யாராவது லஞ்சம் கேட்டால் இது குறித்த புகார்களை பதிவுத்துறை தலைவருக்கு அல்லது பதிவுத்துறை செயலாளருக்கு அனுப்பலாம். இதற்கான தொடர்பு எண்கள் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைவரது பார்வையில் படும்படி எழுதி வைக்கப்பட்டுள்ளன.

முத்திரை தீர்வை

பொது மக்களின் நலனைக் கருதி பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது, தற்போது எதிர்கொள்ளப்படும் சிறு சிறு காலதாமதங்கள் கூட இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்படும். பொதுமக்கள் வழிகாட்டி மதிப்பின்படியான அடிப்படையில் தங்களது சொத்துக்களின் மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், பழனி மற்றும் பெரியகுளம் சரக சார்பதிவாளர்கள் மற்றும் பத்திரப்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story