இளைஞர் திறன் திருவிழா
![இளைஞர் திறன் திருவிழா இளைஞர் திறன் திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2022/08/27/844699-prrpprpp.webp)
இளைஞர் திறன் திருவிழா நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டத்தின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் மோகன் (கணக்கு, நிர்வாகம்), ரமேஷ்பாபு (திறன் வளர்ப்பு-வேலை வாய்ப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் என 200-க்கும் மேற்பட்டோர் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பல்வேறு அரசு துறைகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.
அவர்களுக்கு குறைந்தது 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் 6 மாதங்கள வரை பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு வருகிற 3-ந்தேதியும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு 10-ந்தேதியும், வேப்பூர் ஒன்றியத்திற்கு 17-ந்தேதியும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணையும், 9444094325 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.