ஈரானுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்; அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி


ஈரானுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்; அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி
x
தினத்தந்தி 5 Nov 2018 3:40 PM GMT (Updated: 5 Nov 2018 4:29 PM GMT)

ஈரானுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மே மாதத்திற்கு பின், அணு ஆயுத திட்டத்தினை கைவிடாத ஈரான் நாடு மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என கூறினார்.  அந்நாட்டுடன் தொடர்பு வைத்து கொள்ளும் நாடுகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

ஈரான் நாடு இவற்றை புறந்தள்ளியதுடன், அணு ஆயுத திட்டம் அமைதி நோக்கத்திற்கானது என தொடர்ந்து கூறி வந்தது.

இந்த நிலையில், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது. இந்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஈரானின் எண்ணைய் மற்றும் நிதித்துறையை கடுமையாக பாதிக்கும் தடையாக இந்த பொருளாதார தடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற பொருளாதார தடைகளை நாங்கள் பெருமையுடன் புறக்கணித்துச்செல்வோம். ஏனெனில், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று ஈரான் அதிபர் ரவுகானி தொலைக்காட்சி உரையில் கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ஈரானுக்கு எதிராக கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என கூறினார்.

இந்த பட்டியலில் இத்தாலி, கிரீஸ், தென்கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் உள்ளன.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதனை இந்தியா நவம்பர் 4ந்தேதிக்குள் முழுவதும் நிறுத்திவிட வேண்டும் என அமெரிக்கா முன்பு தெரிவித்து இருந்தது.

Next Story