பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை: ‘அவமானத்துக்கு உரியவர்கள்’ - போராட்டக்காரர்கள் மீது அதிபர் மெக்ரான் தாக்கு


பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை: ‘அவமானத்துக்கு உரியவர்கள்’ - போராட்டக்காரர்கள் மீது அதிபர் மெக்ரான் தாக்கு
x
தினத்தந்தி 25 Nov 2018 10:45 PM GMT (Updated: 25 Nov 2018 8:56 PM GMT)

பிரான்ஸில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்களை அவமானத்துக்கு உரியவர்கள் என அதிபர் மெக்ரான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் வாகனங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் கார்பன் எரிபொருட்களின் நேரடி வரி உயர்த்தப்பட்டதால் எரிபொருட்களின் விலை 40 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து இருக்கிறது.

இது அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 17-ந் தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

நேற்று முன்தினம் பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு பெற்றதாக பிரான்சின் உள்துறை அமைச்சகம் கூறியது.

தலைநகர் பாரீஸ் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களில் சிலர் போலீசாரின் தடுப்புகளை தகர்த்தனர். தீயிட்டு கொளுத்தினர். மேலும் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் அதிபர் மெக்ரான் போராட்டக்காரர்களை கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அவமானத்துக்கு உரியவர்கள், பிரெஞ்சு குடியரசில் வன்முறைக்கு இடமில்லை. போலீசாரை தாக்கியவர்கள் குறித்து நான் வெட்கப்படுகிறேன். பிற குடிமக்களையும், பத்திரிகையாளர்களை தாக்கியவர்களையும் நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.



Next Story