எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு


எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு:  அமெரிக்கா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Jun 2019 4:34 AM GMT (Updated: 14 Jun 2019 7:23 AM GMT)

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

வாஷிங்டன்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள புஜைரா துறைமுகம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய பொருளாதார வழித்தடமாக திகழ்கிறது. அரபுநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் அனைத்து நாடுகளின் சரக்கு கப்பல்களும் இந்த துறைமுகத்தை கடந்துதான் செல்லவேண்டும்.ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த மாதம் 11-ந் தேதி புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டது. கடல் கண்ணி வெடிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.சவுதி அரேபியாவும், சில மத்திய கிழக்கு நாடுகளும் ஈரான் மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தன. ஆனால் ஈரான் இதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் புஜைரா துறைமுகத்தில் இருந்து 70 மைல் தொலைவில், பானாமா நாட்டு கொடியுடன் ‘கோகுகா கரேஜியஸ்’ என்ற எண்ணெய் கப்பலும், நார்வே நாட்டுக்கு சொந்தமான ‘அல்டைர்’ என்ற எண்ணெய் கப்பலும் நிறுத்தப்பட்டிருந்தன.நேற்று காலை இந்த 2 கப்பல்களிலும் அடுத்தடுத்து பயங்கர குண்டு வெடிப்பு நேரிட்டது. இதில் 2 கப்பல்களிலும் தீப்பிடித்தது. அபாய ஒலி எழுப்பப்பட்டது. அதனை கேட்டு அந்த பிராந்தியத்தில் இருந்த அமெரிக்க கடற்படை உடனடியாக உதவிக்கு சென்றது. ‘கோகுகா கரேஜியஸ்’ கப்பலில் இருந்து 21 சிப்பந்திகளும், ‘அல்டைர்’ கப்பலில் இருந்து 23 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சரக்கு கப்பல்களை குறிவைத்து கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை அடுத்து உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது.

இந்நிலையில், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வீடியோ ஆதாரங்கள் மூலம்,   ஈரானுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் திட்டவட்டமாக குற்றச்சட்டை நிராகரித்துள்ளது.

Next Story