இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக உயர்வு


இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 March 2020 8:20 AM GMT (Updated: 18 March 2020 8:20 AM GMT)

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக உயர்ந்துள்ளது.

ரோம்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 345 பேர் பலியாகி உள்ளனர். 3,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை  2,158 லிருந்து 2,503 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,980லிருந்து 31,506 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story