கொரோனா பாதித்த உங்கள் மனைவி நலமா? கனட பிரதமருக்கு 8 வயது சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்


கொரோனா பாதித்த உங்கள் மனைவி நலமா? கனட பிரதமருக்கு  8 வயது சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்
x
தினத்தந்தி 20 March 2020 3:32 PM GMT (Updated: 20 March 2020 3:32 PM GMT)

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எட்டு வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் ஒன்றுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

ஒட்டாவா,

சீனாவில் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் இதுவரை 10,035 -க்கும் தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக உயர்ந்துள்ளது.  உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை தடுக்கவும், குணமாக்கவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. 

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பல நாடுகளில் மந்திரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகர், சுகாதாரத்துறை மந்திரி ராஜ் ஹரிர்சி மற்றும் இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி நாடின் டோரிஸ், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  மனைவி சோபி கிரேகோயர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில்  டேவிட் கெல்லர்மேன் என்பவர் ஒரு கடிதத்தை கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளார். இவர் தனது எட்டு வயது மகனிடம் யாருக்காவது ஒரு கடிதம் எழுது என்று கூறியுள்ளார். அதற்கு அவரது மகன் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தேர்வு செய்தார்.  அந்தக் கடிதம் பிரதமரின் மனைவியின் நலனைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. சிறுவனின் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ள கடிதத்திற்குப் பிரதமர் ஜஸ்டின் அவரது டுவிட்டர் பக்கத்தில்  மரியாதையுடன் பதிலளித்து சிறுவனின் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார். 

அந்தச் சிறுவன் தனது கடிதத்தில், உங்களது மனைவி நலமாக இருப்பதாக நான் நம்புகிறேன் . அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதைக் கேட்டு நான் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுற்றேன். அது உங்களிடமும் வருவதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளான். மேலும், அந்தச் சிறுவனுக்குப் பிரதமரிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருந்துள்ளன. அதனையும் அவர் தன் கடிதத்தில் விளக்கம் கேட்டு எழுதியுள்ளான்.

கொரோனா வைரஸ் பற்றி நான் உங்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். கனடாவில் உள்ள அனைத்து மக்களும் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? மேலும், வைரஸில் இருந்து விலகி இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தயவுசெய்து சிறந்தவற்றைச் கூறுங்கள் என்று எழுதியுள்ளான். அதனைத் தொடர்ந்து, இது எனது தாத்தா, பாட்டி யாரிடமிருந்து கிடைப்பதை நான் விரும்பவில்லை. அனைத்துவகையான கடின உழைப்பிற்கும் நன்றி. தயவுசெய்து பதில் எழுதுங்கள் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

இந்நிலையில், கொரோனா தொற்று கனடாவை அச்சுறுத்தி வரும் இந்தக் கடுமையான சூழலிலும்  கனட பிரதமர் ட்ரூடோ நேரம் ஒதுக்கி சிறுவனின் தனிப்பட்ட கடிதத்திற்கு டுவீட் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

உங்கள் கடிதத்திற்கு நன்றி மைக்கேல். சோபி கிரேகோயர் நன்றாக இருக்கிறாள். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா பரவலைக் குறைப்பதற்கும் மேலும் தாத்தா, பாட்டி மற்றும் அனைத்து குடிமக்களும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத்தாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அதில் கூறியுள்ளார்.

மேலும் அவர், நாடு முழுவதும் பல மருத்துவ வல்லுநர்கள் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், இதற்கு உதவ அனைவரும் செய்யக்கூடிய விஷயங்கள் என்று சில உள்ளன. இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள் மற்றும் உங்கள் முழங்கையில் வைத்து இருமல் செய்யுங்கள். கூட்டமாக வெளியே செல்வதற்குப் பதிலாக, நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைப்பேசியில் பேசுங்கள் கொரோனா குறித்து சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.

Next Story