இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு: பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம்


இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு: பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம்
x
தினத்தந்தி 24 April 2020 12:32 AM GMT (Updated: 24 April 2020 12:32 AM GMT)

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

லண்டன், 

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு ஆஸ்பத்திரிகளில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை, கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, 13 ஆயிரத்து 918 ஆகும். அவர்களில் இனவாரியான புள்ளிவிவரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.

அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2.1 சதவீத பாகிஸ்தானியரும், 1.9 சதவீத ஆப்பிரிக்கர்களும், 0.4 சதவீத சீனர்களும், 0.6 சதவீத வங்க தேசத்தினரும், 0.9 சதவீத இதர கருப்பின பின்னணி கொண்டவர்களும், 1.9 சதவீத இதர ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர்.

கொரோனாவுக்கு பலியான தேசிய சுகாதார சேவை பணியாளர்கள் எண்ணிக்கை 69 ஆகும். இதிலும், சிறுபான்மை ஊழியர்கள் கணிசமானோர் பலியாகி உள்ளனர். அவர்களில் இந்திய டாக்டர் மஞ்சீத்சிங் ரியாத்தும் அடங்குவார்.

இங்கிலாந்தில் சிறுபான்மையினர் மக்கள்தொகை 13 சதவீதம் ஆகும். ஆனால், கொரோனா பலி எண்ணிக்கையில் அதையும் தாண்டி 16.2 சதவீதம்பேர் பலியாகி இருப்பது குறித்து இங்கிலாந்து சுகாதார மந்திரி மட் ஹங்கோக் கவலை தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரிடையே இதய கோளாறு, நீரிழிவு, வைட்டமின் பற்றாக்குறை, மரபணு கோளாறு ஆகிய உடல்நல பிரச்சினைகள் அதிகமாக இருப்பதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததும்தான், அவர்கள் பலி விகிதாச்சாரம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Next Story