சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - புதிதாக 16 பேருக்கு பாதிப்பு


சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - புதிதாக 16 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 20 May 2020 4:16 AM GMT (Updated: 20 May 2020 4:16 AM GMT)

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

உலக நாடுகளை ஒருசேர அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், முதன் முதலாகக் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. சீனா எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளால், அந்த நாட்டில் கொரோனா வைரஸ் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.  

முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவிய உகான் நகரில், கொரோனா பாதிப்பு அறவே இல்லை என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,  கட்டுப்பாடுகள்  விலக்கப்பட்டு, மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இயல்பு வாழ்க்கைக்கு சீனா வேகமாக திரும்பிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், கொரோனா வைரஸ் மீண்டும் சீனாவை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.  குறிப்பாக சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் கொரோனா படிப்படியாக தலைகாட்டத் தொடங்கியுள்ளது. சீனாவில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. இதில், 15 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.

நேற்றைய நிலவரப்படி ஜிலின் மாகாணத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 133- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 106 பேர் மீண்ட நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 சீனாவில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 368- ஆக உள்ளது. கொரோனா முதன் முதலில் பரவிய உகான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது. ஹுபெய் மாகாணம்  சுமார் 11 கோடி மக்கள் தொகையைக் கொண்டதாகும். 

Next Story