சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்


சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
x
தினத்தந்தி 13 July 2020 12:34 AM GMT (Updated: 13 July 2020 12:34 AM GMT)

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

பீஜிங், 

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தின் டாங்க்சன் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்க்சன் நகரின் கேய் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தலைநகர் பீஜிங் உள்பட டாங்க்சன் நகருக்கு அருகே உள்ள பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.38 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் போது வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை. எனினும் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் மீட்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1976ம் ஆண்டு இதே டாங்க்சன் நகரில் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது நினைவுகூரத்தக்கது.


Next Story