உகாண்டாவில் சோகம்; படகு கவிழ்ந்ததில் 33 பேர் பலி
ஆல்பர்ட் ஏரி ஆப்பிரிக்காவின் 7-வது நீளமான ஏரி என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பாலா,
உகாண்டா, காங்கோ எல்லையில் அமைந்துள்ள ஆல்பர்ட் ஏரியில் ஒரு படகில் ஏராளமானோர் பயணம் செய்தனர். அப்போது பலத்த காற்று வீசியதில் படகு மூழ்கியது. படகில் இருந்தவர்கள் அலறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 21 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனாலும் 33 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மோசமான பாதுகாப்பு மற்றும் மாறி வரும் வானிலைதான் ஏரிகளில் இப்படிப்பட்ட விபத்துக்கள் நடப்பதற்கு காரணமாகின்றன’’ என தெரிவித்தார்.
இதையே பிராந்திய கடல் போலீஸ் அதிகாரி சாமுவேல் ஒன்யாங்கோ உறுதி செய்து கூறுகையில், ‘‘பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறுவதாலும், வானிலை மாறி வருவதாலும் ஆல்பர்ட் ஏரியில் பல படகு விபத்துகள் நடந்துள்ளன’’ என குறிப்பிட்டார். இந்த ஆல்பர்ட் ஏரி ஆப்பிரிக்காவின் 7-வது நீளமான ஏரி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story