அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 April 2021 4:27 PM GMT (Updated: 16 April 2021 4:28 PM GMT)

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரவு நேரப் பணியாளர்கள் தங்களது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நிறுவனத்துக்குள் நுழைந்தார். பின்னர் அவர் அங்கிருந்த நபர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. அவர்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த மர்ம நபர் விடாமல் விரட்டிச்சென்று ஒவ்வொருவரையும் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளினார்.இந்த கோர சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனிடையே இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் யார் இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 


Next Story