‘எங்கள் ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது’; சீனா சொல்கிறது


‘எங்கள் ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது’; சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 7 May 2021 10:59 PM GMT (Updated: 7 May 2021 10:59 PM GMT)

சீனா கடந்த வாரம், லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்தின் அடிப்படை பகுதியை எடுத்துச் சென்ற அந்த ராக்கெட், அப்பணி முடிந்தபின் சிதைவடைந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது.

இ்ந்நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், ஒரு பெரிய சீன ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்திருப்பதாகவும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் இந்த வார இறுதியில் பிரவேசிக்கும் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. குறிப்பிட்ட சீன ராக்கெட்டின் எடை 22 டன்கள் என்பதால், இத்தகவல் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விஷயம் தொடர்பாக சீனா முதல்முறையாக மவுனம் கலைந்திருக்கிறது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் இதுகுறித்து கூறுகையில், ‘பூமியை நோக்கித் திரும்பி வரும் ராக்கெட் குறித்து நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். அந்த ராக்கெட் சிதைவுகள், பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததுமே பெரும்பாலும் எரிந்து போய்விடும். அதன் பாகங்கள், எந்த வான்வெளி செயல்பாடுகளுக்கோ, பூமிக்கோ பாதிப்பு, சேதத்தை ஏற்படுத்தாது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறையினர் அவ்வப்போது உரிய தகவல்களை அளிப்பார்கள்’ என்றார்.

இதற்கிடையில், குறிப்பிட்ட ராக்கெட்டின் சில பாகங்கள் சர்வதேச கடல் பகுதியில் விழும் என்று சில சீன நிபுணர்கள் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story