தலீபான்களின் அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர்


தலீபான்களின் அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர்
x
தினத்தந்தி 25 Sep 2021 5:37 PM GMT (Updated: 25 Sep 2021 11:27 PM GMT)

ஐ.நா.வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுடன் சண்டையிட்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள், அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி நாட்டை முழுமையாக கைப்பற்றினர்.அதனை தொடர்ந்து, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்தனர். தலீபான்களின் இந்த புதிய அரசை உலக நாடுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஐ.நா.வும் தலீபான்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரை
அதே சமயம் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதலே தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு தலீபான்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு பெரும் பங்கு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதனை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா, பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி
இது பற்றி அவர் பேசுகையில் “இப்போது அனைத்து சர்வதேச சமூகமும் முன்னோக்கி செல்லும் வழி என்ன என்று சிந்திக்க வேண்டும். நாம் செல்லக்கூடிய 2 பாதைகள் உள்ளன. நாம் இப்போது ஆப்கானிஸ்தானை புறக்கணித்தால் அது அந்த நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையும். ஐ.நா. அறிக்கையின்படி பாதி ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர், அடுத்த ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்வார்கள். ஒரு மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி நம் முன்னால் உள்ளது. இது ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சர்வதேச சமூகம் தலீபான்களின் அரசை ஆதரிக்க வேண்டும்” என கூறினார்.

பாராட்டுக்கு பதிலாக குற்றச்சாட்டு
அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவது குறித்து பேசிய இம்ரான்கான் “ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்காக, சில காரணங்களால், பாகிஸ்தானை அமெரிக்காவின் அரசியல்வாதிகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மேடையில் இருந்து, அவர்கள் அனைவரும் உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு நாங்கள் அமெரிக்க பயங்கரவாதப் போரில் சேர்ந்தபோது ஆப்கானிஸ்தான் தவிர பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் உதவி 80,000 பாகிஸ்தான் உயிர்களைக் கொன்றது மற்றும் உள்நாட்டு சச்சரவு மற்றும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. நியாமாக பாகிஸ்தானுக்கு பாராட்டு வார்த்தைகள் கிடைக்க வேண்டும். ஆனால் மாறாக குற்றம்சாட்டப்படுகிறது” என தெரிவித்தார்.

Next Story