விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்தன - 5 பேர் பலி


விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்தன - 5 பேர் பலி
x

காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள் பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

காசா சிட்டி,

இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130க்கும் மேற்பட்டோர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாமுனை மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா முனையில் நடைபெற்றுவரும் போரால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐ.நா. மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் தேவை அதிகரிப்பு காரணமாக காசாவில் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எகிப்து, இஸ்ரேல் எல்லைகள் வழியாக காசாவுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், பணய கைதிகளை விடுவிக்காதவரை நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, காசாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன.

இந்நிலையில், காசா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காசா சிட்டியின் ஷதி அகதிகள் முகாமில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது, அமெரிக்க விமானப்படை விமானங்கள் நிவாரண பொருட்களை வீசின. பாரசூட் மூலம் நிவாரண பொருட்கள் காசாவில் தரையிறங்கின. அப்போது, நிவாரண பொருட்களின் தொகுப்பு ஒன்று பாரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே விழுந்தது. அது அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

பாரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயனற்றது என்றும், நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டுவரும் காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.


Next Story