அரசு அமைப்புகளின் பயன்பாடு பற்றி ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் கேட்டு பாருங்கள்: லண்டனில் ராகுல் காந்தி பேச்சு


அரசு அமைப்புகளின் பயன்பாடு பற்றி ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் கேட்டு பாருங்கள்:  லண்டனில் ராகுல் காந்தி பேச்சு
x

என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம் பற்றி குறிப்பிட்டு) உள்ளது என லண்டனில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.



லண்டன்,


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு மற்றும் காஷ்மீர் வரையில் நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த ஜனவரி இறுதியில் நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.

இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என்று கூறி இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து அவர் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயக ரீதியில் போட்டியிடும் இயல்பு முற்றிலும் மாறி விட்டது. அதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரேயொரு அமைப்புதான். அடிப்படைவாத, பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து இந்திய அமைப்புகளையும் தனது பிடிக்குள் வைத்து உள்ளது.

அவர்கள் நமது நாட்டின் வெவ்வேறு அமைப்புகளை எப்படி தங்கள் வசப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? என்பது அறிந்து அதிர்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ரகசிய சமூகம். இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அடிப்படையில் அது கட்டமைக்கப்பட்டது. அதிகாரத்திற்கு வருவதற்கு ஜனநாயக வழியில் போட்டியிடுவது என்ற கருத்தின்படி செயல்படுவது, அதன்பின்னர், ஜனநாயக போட்டியை மறைமுக தாக்குதல் நடத்தி சீர்குலைக்க முயன்று வருகிறது என கூறியுள்ளார்.

இந்தியாவில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு என்ன நடக்கிறது என உங்களுக்கே தெரியும். காங்கிரஸ் அதுபற்றி எதுவும் கூறவில்லை. ஆனால், வெளிநாட்டு பத்திரிகைகளில் எல்லா காலங்களிலும் அதுபற்றிய கட்டுரைகள் வெளிவருகின்றன. இந்திய ஜனநாயகம் தீவிர பிரச்னையில் உள்ளது என குறிப்பிடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்களே, ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று கேட்டு பாருங்கள். என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம்) உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.


Next Story