இந்தியாவில் பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு ஒப்புதல் வழங்கிய அரசு


இந்தியாவில் பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு ஒப்புதல் வழங்கிய அரசு
x

இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கான வாராந்திர பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.



மாஸ்கோ,


இந்தியா மற்றும் ரஷியா இடையேயான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின்படி, ரஷியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் இந்தியாவின் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கோவா, அமிர்தசரஸ் மற்றும் ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களுக்கு விமானங்களை இயக்க முடியும்.

இதேபோன்று, இந்தியாவில் இருந்து ரஷியாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட 6 இடங்களுக்கு விமான சேவையை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 7-ந்தேதி மேம்படுத்தப்பட்ட அறிவிப்பின்படி இந்த நடைமுறை பின்பற்றப்படும். எனினும், இதுவரை இருந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கான வாராந்திர பயணிகள் விமான சேவையானது 52 ஆக இருந்தது.

இந்நிலையில், வாராந்திர ரஷிய விமான சேவை எண்ணிக்கையை 52-ல் இருந்து 64 ஆக அதிகரிக்க இந்தியா ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கான இருதரப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான வாராந்திர ரஷிய விமான சேவை ஒப்புதலை முழு அளவில் பயன்படுத்துவதற்கான நடைமுறை அமலுக்கு வர சில காலம் ஆகும் என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Next Story