செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வடகொரியா சோதனை


செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வடகொரியா சோதனை
x

கோப்புப்படம்

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சியோல்,

ஐ.ந. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை புறக்கணித்தும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்ததாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்தன. மேலும் இந்த ஏவுகணை ஜப்பான் வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தவை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியாக, மாதிரி செயற்கைக்கோள் ஒன்றை வடகொரியா நேற்று விண்ணில் செலுத்தி சோதித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.


Next Story