ரஷியாவில் உள்நாட்டு கலகம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திய ராணுவ வீரர்கள்... புதின் புகழாரம்


ரஷியாவில் உள்நாட்டு கலகம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திய ராணுவ வீரர்கள்... புதின் புகழாரம்
x

ரஷியாவில் உள்நாட்டு கலகம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திய ராணுவ வீரர்களை புதின் புகழ்ந்து பேசியுள்ளார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவிய வாக்னர் அமைப்பு, உக்ரைனில் ரஷிய கொடியை நாட்டவும் செய்தது.

இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான இந்த கிளர்ச்சி படையினர் திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பி அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். இந்த வாக்னர் என்ற பெயரிலான அமைப்பு, ரஷியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தி ஒரு கூலிப்படையாக இயங்கி வருகிறது.

அந்த அமைப்பு தொடக்கத்தில் ரஷிய ஆதரவு படையாக செயல்பட்டு, உக்ரைனில் தாக்குதலை நடத்தியது. சமீபத்தில் அதன் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த கிளர்ச்சி நடவடிக்கைகளால், ரஷியாவில் உள்நாட்டு போர் ஏற்பட கூடிய சூழல் காணப்பட்டது. அதன்பின் சமரசம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ரஷியாவின் கிரெம்ளின் மாளிகையில் உள்ள கதீட்ரல் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பால் ஏற்பட இருந்த உள்நாட்டு கலகம் தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி பேசினார். ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர், ரஷியாவில் ஏற்பட இருந்த உள்நாட்டு போரை நிறுத்தி உள்ளனர். நீங்கள் கடினம் வாய்ந்த சூழ்நிலையில், ஒரு தெளிவான மற்றும் நன்றாக ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு இருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் அடைக்கலம் கோரி சென்று விட்டால், குற்ற வழக்குகளை கைவிட வேண்டும் என ரஷியாவிடம் பிரிகோஜின் ஒப்பந்தம் ஏற்படுத்திய பின்னர், அவரது கிளர்ச்சி நடவடிக்கை முடிவுக்கு வந்தது என கூறப்படுகிறது.

எனினும், வாக்னர் அமைப்பின் இந்த செயலால் ரஷிய அதிபர் புதினுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.


Next Story