புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி  பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன்படி தர்மபுரியில் உள்ள கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய ஸ்ரீ பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மிராய பெருமாள் சாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீனிவாச பெருமாள் கோவில்

தர்மபுரி அருகே புலிக்கரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை, உபகார பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ராமமூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் பழைய தர்மபுரி அடுத்த வரதகுப்பத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிமூல வெங்கட்ரமண சாமி

இதேபோல மூக்கனூர் அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம்

இந்த வழிபாட்டில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதேபோல அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


Next Story