20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லுமா இந்திய அணி? கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதல்


20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லுமா இந்திய அணி? கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதல்
x

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான்.

முந்தைய ஆட்டத்தில் சூர்யகுமாரின் அதிரடியான சதமும் (111 ரன்), தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சும் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கின. நியூசிலாந்து பவுலர் டிம் சவுதி 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லை. அதே உத்வேகத்துடன் களம் இறங்கும் இந்தியா இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்தும் முனைப்புடன் உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் வாய்ப்பை பெற்ற இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆட்டத்தில் 6 ரன்னில் வீழ்ந்தார். இன்றைய மோதலில் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு முன்கூட்டியே டாக்டரின் அனுமதியை பெற்று இருப்பதால் அதற்காக இந்த ஆட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

ஒரு நாள் தொடரின் போது அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வழிநடத்த இருக்கிறார். அணியில் மார்க் சாப்மேன் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

மொத்தத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

நேப்பியர் பேட்டிங்குக்கு உகந்த மைதானம். இங்கு 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 241 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக உள்ளது. ஆனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கொஞ்சம் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, ஆடம் மில்னே, லோக்கி பெர்குசன்.


Next Story