ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 8 Sep 2019 12:03 AM GMT (Updated: 8 Sep 2019 12:03 AM GMT)

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை இந்தியா அணி வீழ்த்தியது.

மொராடுவா,

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. அங்குள்ள மொராடுவாவில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. அர்ஜூன் ஆசாத் 121 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் வர்மா 110 ரன்னும் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 245 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசிர் சதம் அடித்தும் (117 ரன்) அந்த அணிக்கு பலன் இல்லை. இந்திய தரப்பில் அதர்வா அன்கோல்கர் 3 விக்கெட்டும், சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பட்டில் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 2-வது வெற்றியை பெற்ற இந்திய அணி அரைஇறுதியை உறுதி செய்தது. தனது முதலாவது ஆட்டத்தில் குவைத்தை வென்று இருந்த இந்தியா, நாளை நடைபெறும் கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

Next Story