கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதியை மீறினால் ஐ.பி.எல். அணிக்கு ரூ.1 கோடி அபராதம்


கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதியை மீறினால் ஐ.பி.எல். அணிக்கு ரூ.1 கோடி அபராதம்
x
தினத்தந்தி 1 Oct 2020 11:00 PM GMT (Updated: 1 Oct 2020 11:00 PM GMT)

கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதியை மீறினால் ஐ.பி.எல். அணிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துபாய்,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கொரோனா அச்சத்தால் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் அனுமதிக்கப்படவில்லை. வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் மீண்டும் நினைவூட்டியுள்ளது. பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஒரு வீரர் வெளியே சென்று வந்தது கண்டறியப்பட்டால் உடனடியாக 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். கொரோனா இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மீண்டும் அணியினருடன் இணைய அனுமதிக்கப்படுவார். 2-வது முறையாக இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். மீண்டும் இதே புகாரில் சிக்கினால் ஐ.பி.எல்.-ல் இருந்து நீக்கப்படுவார். அத்துடன் ஏறக்குறைய ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படமாட்டார்.

அணிகளின் நிர்வாகிகள், உதவியாளர்கள், வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கும் இந்த விதிமுறை பொருந்தும். பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்கள் அல்லது உதவியாளர்களுடன் வேறு யாரையாவது பேச அணி நிர்வாகம் அனுமதி அளித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இதே தவறை 2-வது முறையாக செய்தால் அந்த அணிக்குரிய ஒரு புள்ளி குறைக்கப்படும். 3-வது முறையாகவும் இதே குற்றச்சாட்டுக்குள்ளானால் 2 புள்ளி (ஒரு வெற்றிக்குரிய புள்ளி) பறிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம் கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையையும் எதிர்கொள்ள நேரிடும்.

Next Story