இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் மியாண்டட் யோசனை


இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் மியாண்டட் யோசனை
x
தினத்தந்தி 16 Oct 2021 12:05 AM GMT (Updated: 16 Oct 2021 12:05 AM GMT)

இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு அதன் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

கராச்சி,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் களம் இறங்குகின்றன. இலங்கை, வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, நமிபியா ஆகிய 8 அணிகள் முதல் சுற்றில் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ந்தேதி துபாயில் சந்திக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை. இந்த தடவை அந்த சோகத்துக்கு முடிவுகட்டும் வேட்கையுடன் காத்திருக்கும் பாகிஸ்தானுக்கு முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

மியாண்டட் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான மோதல் இந்த தொடரில் உத்வேகத்தை பெறுவதற்கு பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஆட்டமாக இருக்கும். இந்தியா மிகவும் வலுவான அணி. சில முன்னணி வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனால் நாங்கள் எந்தவித அச்சமும், நெருக்கடியும் இன்றி விளையாடுவதுடன் ஒவ்வொருவரும் பங்களிப்பை அளித்தால் இந்திய அணியை தோற்கடிக்க முடியும். 

20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் ஒன்றிரண்டு வீரர்கள் தான் ஆட்டத்தில் வெற்றி தேடி தர முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அணியின் வெற்றிக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். இன்னிங்சில் ஒரு வீரரின் 20 ரன் அல்லது முக்கியமான கேட்ச், ரன்-அவுட், ஒரு சிறந்த ஓவர் கூட ஆட்டத்தில் வெற்றியை தீர்மானித்து விடும். எனவே அணியில் உள்ள ஒவ்வொருவரும் பங்களிப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

Next Story