ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: கால்இறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான்


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: கால்இறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான்
x
தினத்தந்தி 21 Jan 2022 10:34 PM GMT (Updated: 21 Jan 2022 10:34 PM GMT)

தொடர்ச்சியாக 3-வது வெற்றியை சுவைத்த இங்கிலாந்து அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

செயின்ட் கிட்ஸ், 

16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. கேப்டன் டாம் பிரேஸ்ட் 154 ரன்கள் (119 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 38.2 ஓவர்களில் 173 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 3-வது வெற்றியை சுவைத்த இங்கிலாந்து அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை சொந்தமாக்கியதுடன், கால்இறுதிசுற்றையும் உறுதி செய்தது.

லீக் சுற்றின் கடைசி நாளான இன்று 4 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஒரு லீக்கில் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்தியா, உகாண்டாவுடன் (பி பிரிவு) மோதுகிறது. இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 இந்திய வீரர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில், கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ரஷீத் உள்பட 5 பேருக்கு மறுபடியும் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்திருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் விளையாட முடியாது.


Next Story