சாகாவுக்கு அணியில் நெருக்கடி கொடுக்கப்பட்டதா என பிசிசிஐ கேட்கும்: பொருளாளர் அருண் துமல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Feb 2022 4:31 PM GMT (Updated: 21 Feb 2022 4:32 PM GMT)

அணியில் நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து சாகாவிடம் பிசிசிஐ கேட்கும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். அணியில் தேர்வு செய்யப்படாததற்கு ராகுல் டிராவிட்டை குற்றம்சாட்டினார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார் என்று சாகா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து டிராவிட் பேசியுள்ளார். அவர் கூறுகையில்,  “விருத்திமான் சாஹாவின் கருத்துகளால் நான் காயமடையவில்லை. அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர். அவரது சாதனைகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. இதனால் சாஹா மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் எப்போதும் குறையாது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

இந்த நிலையில், சாகாவின் சர்ச்சை கருத்து குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண்துமல் கூறுகையில், விருத்திமான் சாகாவின் டுவீட் குறித்தும், நடந்த உண்மை சம்பவம் என்னவென்றும் அவரிடம் கேட்போம். அவர் மிரட்டப்பட்டாரா என்பதும், அவரது டுவீட்டின் பின்னணி மற்றும் சூழல் என்ன என்பதும் எங்களுக்குத் தெரிய வேண்டும். இதுகுறித்து  செயலாளர் (ஜெய். ஷா) நிச்சயமாக விருத்திமானிடம் பேசுவார்" என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறியுள்ளார்.


Next Story