இரண்டு தசாப்தங்களாக வேலை செய்யாத உத்தி...அதுவே பெங்களூரு தோல்விக்கு காரணம் - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்


இரண்டு தசாப்தங்களாக வேலை செய்யாத உத்தி...அதுவே பெங்களூரு தோல்விக்கு காரணம் - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக பெங்களூரு தோல்வியை தழுவியது.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு தடுமாறி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 தசாப்தங்களாக விராட் கோலியுடன் 3 வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை களமிறக்கும் பழைய திட்டத்தை கடைப்பிடிப்பதே பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பதாக இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். மேலும் பெங்களூரு அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று விமர்சிக்கும் அவர் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-

"நீங்கள் சஹாலை கழற்றி விட்டு ஹசரங்காவை வாங்கினீர்கள். பின்னர் அவரையும் கழற்றி விட்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய ஸ்பின்னர்கள் மீது முதலீடு செய்தீர்கள். ஆர்சிபி அணியின் பந்து வீச்சு நிரந்தரமான பலவீனம் கொண்டது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் அதை தீர்ப்பதற்கான முயற்சி இன்னும் எடுக்கப்படவில்லை. பேட்டிங்கை பொறுத்த வரை விராட் கோலி மற்றும் 3 வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடும் திட்டம் 2 தசாப்தங்களாக வேலை செய்யாத யுக்தியாகும். பெரும்பாலான அணிகள் வேறு பாதையில் நடக்கின்றன. ஆனால் ஆர்.சி.பி. அப்படி அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story