போலி 'பீல்டிங்' செய்தாரா கோலி?- வங்காளதேச அணி பரபரப்பு குற்றச்சாட்டு- ஐசிசி விதிமுறை கூறுவது என்ன?


போலி பீல்டிங் செய்தாரா கோலி?- வங்காளதேச அணி பரபரப்பு குற்றச்சாட்டு- ஐசிசி விதிமுறை கூறுவது என்ன?
x

Image Courtesy: Screengrab from Twitter

விராட் கோலி மீது வங்காளதேச அணி வீரர் நூருல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி மீது வங்காளதேச அணி வீரர் நூருல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது வங்காளதேச அணியின் இன்னிங்ஸ் போது விராட் கோலி தனது கைகளில் பந்து இல்லாமலேயே ரன் அவுட் செய்ய முயல்வது போன்று நடித்து பேட்ஸ்மேனை குழப்பினார் என்பதே அந்த குற்றச்சாட்டு.

ஆட்டத்தின் 7வது ஓவரில் அக்‌ஷர் படேல் வீசிய பந்தை லிண்டன் தாஸ் ஆஃப் சைடில் அடித்துவிட்டு ரன் ஓடினார். பந்து நேராக பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது. அதனை அவர் தினேஷ் கார்த்திக்கிடம் வீசினார். ஆனால் நடுவே இருந்த விராட் கோலி, பந்து தன் கையில் இல்லை என்ற போதும், நான் ஸ்ட்ரைக்கர் முனைக்கு த்ரோ செய்வது போன்று பாவனை செய்தார். இதனால் பேட்ஸ்மேன்கள் குழம்பினர்.

இது குறித்து வங்காளதேச வீரர் நூருல் ஹசன் கூறுகையில், "நிச்சயமாக மழைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது மைதானத்தில் இருந்த ஈரப்பதம் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தப் போட்டியில் ஒரு போலியான த்ரோ இருந்தது. அதன்மூலம் எங்களுக்கு 5 ரன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை" என்றார்.

ஐசிசி விதி 41.5.1-படி ஒரு பேட்ஸ்மேனை வேண்டுமென்றே கவனச்சிதறல் செய்ய தூண்டுவது, ஏமாற்றுவது, அவர் ஓடும்போது குறுக்கே சென்று தடையாக நிற்பது போன்றவை தவறாகும். அதற்கு பெனால்டியாக பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் எந்தவொரு கவனச்சிதறல் அல்லது ஏமாற்றுதல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லையா என்பதை நடுவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று ஐசிசி விதி 41.5.2 கூறுகிறது. ஆனால் நேற்று நடுவர்கள் இதை கவனிக்காததால் களத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

ஒருவேளை நேற்று பெனல்டியாக 5 ரன்கள் வழங்கப்பட்டு இருந்தால் போட்டியின் முடிவு மாறி இருக்கும். ஏனெனில் இந்த போட்டியில் வங்களாதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story