ரோகித்தை வேண்டுமென்றே அலைக்கழித்தாரா ஹர்திக்? ரசிகர்கள் ஆதங்கம்... களத்தில் நடந்தது என்ன?


ரோகித்தை வேண்டுமென்றே அலைக்கழித்தாரா ஹர்திக்? ரசிகர்கள் ஆதங்கம்... களத்தில் நடந்தது என்ன?
x
தினத்தந்தி 25 March 2024 10:56 AM GMT (Updated: 25 March 2024 11:09 AM GMT)

நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் - மும்பை இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

முன்னதாக இப்போட்டியில் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை அணிக்காக முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அதில் மும்பை பந்து வீசிய இன்னிங்சில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை, பாண்ட்யா பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று நிற்குமாறு அலைக்கழித்தது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

ஏனெனில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்த வரை பெரும்பாலும் உள்வட்டத்திற்கு உள்ளேயே நின்று பீல்டிங் செய்வார். ஆனால் தற்போது கேப்டன் பதவியில் இல்லாததால் அவரை லாங் ஆன் திசைக்கு சென்று பீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்ட்யா சொன்னது மும்பை ரசிகர்களை ஆதங்கப்பட வைத்தது. ரோகித்தை வேண்டுமென்றே ஹர்திக் அலைக்கழித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, நேற்று வந்த பாண்ட்யா விரும்பிய இடத்தில் பீல்டிங் செய்ய விடக்கூடாதா என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறுபுறம் வழக்கம்போல உள்வட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மாவை, பாண்ட்யா தம்மை லாங் ஆன் திசைக்கு செல்லுமாறு சொன்னபோது "என்னையா சொல்றீங்க? நானா" என்ற வகையில் ரியாக்சன் கொடுத்து பவுண்டரி அருகே ஓடி சென்று நின்றது மும்பை ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மனதிற்கு கஷ்டமாக அமைந்தது.


Next Story