சென்னை அபார பந்துவீச்சு...கொல்கத்தா அணியை 137 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்தல்


சென்னை அபார பந்துவீச்சு...கொல்கத்தா அணியை 137 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்தல்
x

சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணியை சென்னை பவுலர்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தினர். கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரைன் 27 ரன்களிலும், ரகுவன்ஷி 24 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 9 ரன்களிலும், ரசல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கவுரமான நிலைக்கு எட்ட உதவினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story