இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி : நாளை தொடங்குகிறது


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி : நாளை தொடங்குகிறது
x

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

லண்டன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



இந்த நிலையில் போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

பொதுவாக இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் அளிக்கக்கூடியது. இங்கு அவசரப்படாமல் நிலைத்து நின்று விளையாடினால் தான் கணிசமாக ரன் சேர்க்க முடியும். எனவே நீண்ட நேரம் பேட்டிங் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆனால் அது எளிதான விஷயம் அல்ல.

களத்தில் வலுவாக நிலைநிறுத்தி விளையாடும் போது, எந்த நேரத்தில் பந்து வீச்சை அடித்து நொறுக்கலாம் என்ற உள்ளுணர்வு உங்களுக்குள் தோன்றும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதைவிட முக்கியமாக உங்களது பலம் என்ன? என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

இங்குள்ள சீதோஷ்ண நிலையில் விளையாடிய பல தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்கை பார்த்து இருக்கிறேன். அதில் நிறைய பேர் ரன் குவித்ததையும் பார்த்து உள்ளேன். ஆனால் அவர்களை நான் பின்பற்றி விளையாடப்போவதில்லை. ஏனெனில் அவர்களின் ஆட்ட அணுகுமுறை வேறு. எனது ஸ்டைல் வேறு. ஆனால் அவர்கள் ரன் குவித்த விதத்தை தெரிந்து வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.



ஓவல் எப்படி?

நாங்கள் அறிந்த வரை அனேகமாக சிறந்த பேட்டிங் ஆடுகளங்களில் ஒன்றாக லண்டன் ஓவல் இருக்கிறது. இங்கு பவுண்டரி தூரம் குறைவு என்பதால், உங்களது ஷாட்டுகளை ரன்னாக மாற்ற முடியும். அதற்கு ஏற்ப நீண்ட நேரம் நிலைத்து விட்டால் நிச்சயம் சாதிக்கலாம். அதில் தான் கவனம் தேவை.

20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது கடினமானது. நீங்கள் பல வடிவிலான போட்டிகளில் விளையாடுகிறீர்கள் என்பது தெரியும். எனவே மனதளவில் அதற்கு தகுந்தபடி உங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தையும் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் நீங்களே பேசி மனரீதியாக ஆயத்தமாக வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாக நன்றாக விளையாடி பல வெற்றிகளை குவித்துள்ளோம். அதன் மூலம் பெற்ற நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு வழங்கி, அவர்களை விரும்பும் விதத்தில் சிறப்பாக விளையாட வைக்க முடியும் என்று ரோகித் சர்மா கூறினார்.



கம்மின்ஸ் கருத்து

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களில் புஜாரா தவிர மற்ற அனைவரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடியவர்கள். ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன், டேவிட் வார்னர் மட்டும் ஐ.பி.எல்.-ல் விளையாடி விட்டு வந்திருக்கிறார்கள். ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடினர். அதனால் பெரும்பாலான வீரர்களுக்கு ஓரளவு ஓய்வு கிடைத்தது.

இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், 'இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பது அரிதாகி விட்டது. நாங்கள் தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில் (டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடர்) விளையாட வேண்டி இருக்கிறது என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். அதனால் மிகையான போட்டிகளை விட குறைவான போட்டிகளில் விளையாடிவிட்டு வந்திருப்பது கொஞ்சம் நல்லது என்றே நினைக்கிறேன். பந்து வீச்சாளர்களின் பார்வையில் இதை சொல்கிறேன். உடல்ரீதியாக புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடிவிட்டு தாயகம் திரும்பியதும் நாங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டோம். புத்துணர்ச்சியுடன் போட்டியை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்' என்றார்.



'எங்களுக்கு நெருக்கடி இல்லை'-டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'இந்திய அணி நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்லாததால் (2013-ம் ஆண்டுக்கு பிறகு) நெருக்கடியாக இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அப்படி எல்லாம் இல்லை. ஐ.சி.சி. கோப்பையை ஜெயிக்கும் முயற்சியில் நாங்கள் எந்தவிதமான நெருக்கடியையும் உணரவில்லை. ஆனால் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றால் இனிமையாக இருக்கும். இதற்காகத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்திருக்கிறோம்.

அஜிங்யா ரஹானே மீண்டும் அணிக்கு வந்திருப்பது சிறப்பானது. சில வீரர்களின் காயத்தால் அவருக்கு இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் மிகவும் அனுபவசாலி. வெளிநாட்டில் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்து காட்டி இருக்கிறார். இங்கிலாந்தில் கூட சில சிறப்பு வாய்ந்த இன்னிங்சை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இது தான் தனக்கு கிடைத்துள்ள ஒரேஒரு வாய்ப்பு என்ற நினைப்புடன் அவர் போட்டியை அணுகக்கூடாது' என்றார்.



'பேட்டிங்கில் எழுச்சி வேண்டும்'- கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 24 டெஸ்டில் விளையாடி 8 சதம் உள்பட 1,979 ரன்கள் சேர்த்துள்ள கோலி அளித்த ஒரு பேட்டியில், 'ஆஸ்திரேலியா எப்போதும் சவால்மிக்க ஒரு அணி. சிறிய இடைவெளி கொடுத்தாலும் கூட அதை பயன்படுத்தி அவர்கள் வலுவாக ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களின் ஆட்டத்திறன், தரம் மிகவும் உயரியது. இது தான் அவர்களுக்கு எதிராக நான் அபாரமாக விளையாடுவதற்குரிய உந்துசக்தியை இன்னும் அதிகரிக்க செய்கிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு எனது ஆட்டத்தை மேம்படுத்தி, எழுச்சி பெற்றாக வேண்டும்.

லண்டன் ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். பேட்டிங்கின் போது மிக நேர்த்தியாக ஆடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.


Next Story