ஐ.பி.எல்.: டெல்லி அணியிலிருந்து சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டது ஏன்? கங்குலி விளக்கம்


ஐ.பி.எல்.: டெல்லி அணியிலிருந்து சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டது ஏன்? கங்குலி விளக்கம்
x

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சர்பராஸ் கான் இடம்பெற்றிருந்தார்.

புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் சர்பராஸ் கான் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தபோதிலும் இந்திய அணியில் வாய்ப்பு பெறாமல் தவித்து வந்த அவர் நீண்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து தொடரில் அறிமுகம் ஆனார்.

அதில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் 62, 68 ரன்கள் அடித்த அவர் அறிமுக டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் அரை சதங்கள் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

அதன் காரணமாக ஐ.பி.எல். 2024 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் விலை போகாத அவரை சி.எஸ்.கே. மற்றும் கொல்கத்தா அணிகள் தற்போது வாங்குவதற்கு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடத் தடுமாறினார்.

அதனால் அந்த அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். அந்த அணியிலும் பெரிய வாய்ப்பை பெறாத அவரை 2022 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. அங்கேயும் கொடுக்கப்பட்ட ஓரிரு வாய்ப்புகளிலும் அசத்த தவறியதால் 2023 சீசனுடன் டெல்லி அணியும் அவரை கழற்றி விட்டுள்ளது.

இந்நிலையில் சர்பராஸ் கான் டி20 கிரிக்கெட்டுக்கு பொருந்த மாட்டார் என்பதை உணர்ந்ததாலேயே விடுவித்ததாக டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"சர்பராஸ் கான் 5 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கு அதிகம் பொருந்தக்கூடிய வீரர். அந்த வகையான போட்டிகளில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள ரன்கள் அபாரமானதாக இருக்கின்றன. அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் அடித்த ரன்கள் வீண் போகாது என்று சொல்வார்கள். அது அவருடைய விஷயத்தில் சரியாக நடந்துள்ளது" என்று கூறினார்.


Next Story