மும்பை அணியிலிருந்து வெளியேறுகிறாரா ரோகித் சர்மா..? வெளியான தகவல்


மும்பை அணியிலிருந்து வெளியேறுகிறாரா ரோகித் சர்மா..? வெளியான தகவல்
x

image courtesy: PTI

நடப்பு ஐ.பி.எல். சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், நடப்பு சீசனில் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மும்பை நிர்வாகம் பல விமர்சனங்களை சந்தித்தது. மேலும் அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரே நாளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருவதை நிறுத்தினர். ஏனெனில் அந்த அளவிற்கு மும்பை அணியை ரோகித் முன்னின்று வழி நடத்தினார்.

ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் இருந்த மும்பை அணி, ரோகித் கேப்டன்சியில்தான் 5 கோப்பைகளையும் வென்றது. அப்படிப்பட்ட அவரை கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை நியமித்ததற்கு ரசிகர்கள் தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேறி வேறு அணியில் விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் வெளியான தகவலின் படி : தற்போது பாண்டியாவின் கேப்டன்சி ரோகித் சர்மாவிற்கு பிடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். முடிந்தவுடன் மெகா ஏலத்திற்கு செல்லும் ரோகித் சர்மா வேறு அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா தற்போது மும்பை அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வேறு அணிக்காக விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story