மும்பை நிர்வாகம் ரோகித்துக்கு நல்லதுதான் செய்துள்ளது - சுனில் கவாஸ்கர்


மும்பை நிர்வாகம் ரோகித்துக்கு நல்லதுதான் செய்துள்ளது - சுனில் கவாஸ்கர்
x
தினத்தந்தி 14 Feb 2024 3:50 PM GMT (Updated: 14 Feb 2024 3:51 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி கடந்த டிசம்பர் மாதம் அதிரடியாக பறிக்கப்பட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 17-வது ஐ.பி.எல். தொடருக்கான மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மும்பை அணியின் சமூக வலைதளத்தை பின்தொடர்வதை நிறுத்தி தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணிக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்படுவதால் ரோகித் சர்மா நிறைய அழுத்தத்தை சந்திப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே மும்பை நிர்வாகத்தின் இந்த முடிவு ரோகித் சர்மா குறைந்தபட்சம் ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக இருப்பதால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து விடுபட்டு சிறப்பாக செயல்பட வழி வகுக்கும் என்று கவாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;- "ஐபிஎல் அணிகள் எப்போதும் தங்களுடைய வருங்காலத்தையே பார்ப்பார்கள். ஏற்கனவே 36 வயதை கடந்துள்ள ரோகித் சர்மா இந்தியாவுக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருப்பதால் நிறைய அழுத்தத்தை சந்திக்கிறார். எனவே மும்பை நிர்வாகம் அவருடைய அழுத்தத்தை கொஞ்சம் குறைத்து ஹர்திக் பாண்ட்யாவின் தோளில் பொறுப்பை ஒப்படைக்க முயற்சித்துள்ளது.

பாண்ட்யா கேப்டனாக செயல்படுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்மையை ஏற்படுத்தும். இது ரோகித் சர்மா டாப் ஆர்டரில் சுதந்திரமாக விளையாடுவதற்கான வழியையும் உண்டாக்கும். ஹர்திக் பாண்ட்யா 3 அல்லது 5 ஆகிய இடங்களில் களமிறங்கி தன்னுடைய அணி தொடர்ச்சியாக 200 ரன்கள் குவிப்பதற்கு உதவலாம். எனவே மும்பை நிர்வாகம் ரோகித்துக்கு நல்லதுதான் செய்துள்ளது" என்று கூறினார்.


Next Story