ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தகுந்தாற்போல் தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் - சுனில் கவாஸ்கர்


ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தகுந்தாற்போல்  தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் - சுனில் கவாஸ்கர்
x
தினத்தந்தி 25 Dec 2023 11:05 AM GMT (Updated: 25 Dec 2023 11:13 AM GMT)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தகுந்தாற்போல் தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "50 ஓவர் உலகக்கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அதேபோல செயல்படாமல் இத்தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தகுந்தாற்போல் தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். அதற்கு முதலில் அவருடைய மன நிலையை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வர வேண்டும் . உலகக்கோப்பை தொடரில் அவர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆனால் டெஸ்ட் தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும்.

ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடித்து 180 அல்லது 190 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் வெளியே வர முடியும். அவ்வாறு அவர் விளையாடினால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்" என்று கூறினார்.


Next Story