ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா செய்த செயல் - வைரலாகும் வீடியோ


ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா செய்த செயல் - வைரலாகும் வீடியோ
x

Image Courtesy: Twitter 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை சந்தித்த 3வது தோல்வி இதுவாகும். அந்த அணி இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியாகவும் மும்பை உள்ளது. கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா இந்த வருடம் ஒரு சாதாரண வீரராக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக குஜராத் அணியில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.

மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித்திடம் இருந்து கேப்டன்ஷிப் பதவியை பறித்து பாண்ட்யாவிடம் கொடுத்தது ரசிகர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மும்பை அணி விளையாடும் போட்டிகளில் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.

மும்பை அணி விளையாடிய முதல் 2 போட்டிகளில் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டதை போலவே நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியிலும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டனர். மேலும்,, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு நேற்று டாஸ் போடும் போது "ரோகித் ரோகித்" என ஆரவாரம் செய்த ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவை பேசவிடாமல் செய்தனர்.

இந்நிலையில் நேற்றையை ஆட்டத்தில் மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோகித் சர்மா, ரசிகர்களை பார்த்து ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக சத்தமிடாதீர்கள் என கையசைத்து கோரிக்கை வைத்தார்.

ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து இரண்டு, மூன்று முறை கையசைத்து கோரிக்கை வைத்து ரோகித் சர்மா செய்த செயல்தான் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளது. ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்த ரோகித் சர்மாவின் செயலை ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story