சந்தீப் சர்மா அபார பந்துவீச்சு: ராஜஸ்தானுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை


சந்தீப் சர்மா அபார பந்துவீச்சு: ராஜஸ்தானுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை
x

image courtesy: twitter/@IPL

தினத்தந்தி 22 April 2024 3:50 PM GMT (Updated: 22 April 2024 4:05 PM GMT)

மும்பை தரப்பில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 65 ரன்கள் குவித்தார்.

ராஜஸ்தான்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் 6 ரன்களில் பவுல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய முகமது நபி சிறிது நேரம் அதிரடி காட்டிய நிலையில் 23 ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா - நேஹால் வதேரா இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தனர்.

இவர்களில் திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் வதேரா 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து திலக் வர்மா 65 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

முடிவில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ராஜஸ்தான் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story