டி20 உலக கோப்பை: சரிவில் இருந்து மீண்ட நமிபியா - 163 ரன்கள் குவிப்பு
ஜான் பிரைலின்க்-ஜே.ஜே.ஸ்மித் அதிரடி ஆட்டத்தால் நமிபியா அணி 163 ரன்கள் குவித்தது.
கீலாங்,
16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்நிலையில் டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.இதையடுத்து முதலில் களம் இறங்கிய நமிபியா அணியில் மைக்கேல் வான் லிங்கன் மற்றும் திவான் லா காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மைக்கேல் 3 ரன்னுக்கும், திவான் 9 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து ஜான் நிக்கொல், ஸ்டீபன் பார்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஸ்டீபன் 26 ரன்னுக்கும், ஜான் நிக்கொல் 20 ரன்னுக்கும், அடுத்து வந்த கேப்டன் எராஸ்மஸ் 20 ரன்னுக்கும், டேவிட் வைஸ் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 93 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து 7வது விக்கெட்டுக்கு ஜான் பிரைலின்க், ஜே.ஜே.ஸ்மித் ஆகியோர் களம் புகுந்தனர். இந்த இணை அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த இணை 7வது விக்கெட்டுக்கு 34 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தனர் .இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. அந்த அணி தரப்பில் பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்னும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் மதுஷான் 2 விக்கெட்டும், மகேஷ் தீக்ஷனா, சமீரா, கருணரத்னே,ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆட உள்ளது.