டி20 உலகக்கோப்பை: ரோகித் இல்லை...இந்திய அணியின் கேப்டனாக இருக்க தகுதியானவர் அவர்தான் - பட்டாச்சார்யா


டி20 உலகக்கோப்பை: ரோகித் இல்லை...இந்திய அணியின் கேப்டனாக இருக்க தகுதியானவர் அவர்தான் - பட்டாச்சார்யா
x

image courtesy: AFP

தினத்தந்தி 26 April 2024 9:29 AM GMT (Updated: 26 April 2024 10:41 AM GMT)

டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட தகுதியற்றவர் என ஜாய் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

மும்பை,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) சமர்ப்பிக்க மே 1-ந் தேதி கடைசி நாளாகும். தொடக்க அணியில் வீரர்களை மே 25-ந் தேதி வரை மாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வரும் 28-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய அணியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உள்ளூர் வீரர்கள் பலரும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் எந்தெந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட தகுதியற்றவர் என கொல்கத்தா அணியின் முன்னாள் டைரக்டர் ஜாய் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:- ரோகித் சர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்கும் முடிவு அணிக்கு பாதகமாக இருக்கலாம்.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை விட பும்ரா கேப்டனாக செயல்பட்டால் அது அணிக்கு பலன் அளிக்கும் என்று நினைக்கிறேன். அதோடு ரோகித் சர்மா கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டார். அவர் செய்ய வேண்டிய ஒன்று ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான். அதனால் அவரது முடிவை மதித்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதில் விருப்பம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story