மகளிர் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா.!


மகளிர் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா.!
x

ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 34 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக சதர்லேண்ட் மற்றும் வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது. இந்திய பவுலர்களால் ஆஸ்திரேலிய அணியில் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.


Next Story