கோபா அமெரிக்கா கால்பந்து: கத்தாரை வீழ்த்தி அர்ஜென்டினா கால்இறுதிக்கு தகுதி


கோபா அமெரிக்கா கால்பந்து: கத்தாரை வீழ்த்தி அர்ஜென்டினா கால்இறுதிக்கு தகுதி
x

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

சால்வாடோர்,

12 அணிகள் இடையிலான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொண்டது. அர்ஜென்டினா அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தியது.

4-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் மார்டினஸ் இந்த கோலை அடித்தார். 72-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனஸ் மெஸ்சி கோல் கம்பத்துக்கு வெளியே அடித்து வீணடித்தார்.

82-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் செர்ஜி அகுரோ கோல் அடித்தார். கடைசி வரை கத்தார் அணியால் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது.

இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்தது. கொலம்பியா அணி வீரர் குஸ்டோவ் செல்லார் 31-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.

கொலம்பியா அணி தனது 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தையும், அர்ஜென்டினா அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின. ஒரு டிரா, 2 தோல்வியுடன் ஒரு புள்ளி மட்டும் பெற்ற கத்தார் அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. பராகுவே அணி 2 டிரா, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. மற்ற ஆட்டங்களின் முடிவை பொறுத்தே பராகுவே அணி அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

இதற்கிடையில் போட்டி நடைபெறும் மைதானங்கள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், ஆடுகளம் சமமாக இல்லாததால் விளையாட சிரமமாக இருப்பதாகவும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனஸ் மெஸ்சி குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story