வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்


வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 7:12 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம் பரிசாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15-ந் தேதி வரை நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 5 விளையாட்டு வீரர்கள், ஒரு வீராங்கனை மற்றும் அவர்களது 8 பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் (பொறுப்பு) பிரதீப் யாதவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story