ஆசிய குத்துச்சண்டையில் தொடர்ந்து 4-வது பதக்கத்தை உறுதி செய்தார், ஷிவ தபா


ஆசிய குத்துச்சண்டையில் தொடர்ந்து 4-வது பதக்கத்தை உறுதி செய்தார், ஷிவ தபா
x
தினத்தந்தி 23 April 2019 11:28 PM GMT (Updated: 23 April 2019 11:28 PM GMT)

ஆசிய குத்துச்சண்டையில் தொடர்ந்து 4-வது பதக்கத்தை ஷிவ தபா உறுதி செய்தார்.

பாங்காக்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஷிவ தபா (60 கிலோ உடல் எடைப்பிரிவு) தாய்லாந்தின் ருஜக்ரன் ஜன்ட்ராங்கை 5-0 என்ற புள்ளி கணக்கில் துவம்சம் செய்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 25 வயதான ஷிவ தபாவுக்கு குறைந்தது வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அவர் தொடர்ந்து 4-வது முறையாக பதக்கத்தை (2013-ல் தங்கம், 2015-ல் வெண்கலம், 2017-ல் வெள்ளிப்பதக்கம்) கைப்பற்றுகிறார். இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையை பெற்றுள்ள ஷிவ தபா அடுத்து கஜகஸ்தான் வீரர் ஜாகிர் சபியுலினை சந்திக்கிறார்.

பெண்கள் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான எல்.சரிதாதேவி (60 கிலோ) கஜகஸ்தான் வீராங்கனை ரிமா வோலோஸ்சென்கோவை தோற்கடித்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதியை எட்டினார். இதே போல் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான இந்திய மங்கை நிகாத் ஜரீன் (51 கிலோ) 5-0 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனான நஸிம் கஸாபேவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் மொத்தம் 13 இந்தியர்கள் பல்வேறு எடைப் பிரிவுகளில் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.


Next Story