டி20 உலகக் கோப்பை 2022: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!


டி20 உலகக் கோப்பை 2022:  இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!
x
தினத்தந்தி 8 Feb 2022 6:23 AM GMT (Updated: 8 Feb 2022 6:23 AM GMT)

டி20 உலகக் கோப்பை 2022 போட்டிக்காக எம்சிஜியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள், விற்பனைக்கு வந்த ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

மெல்போர்ன்,

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது, இதில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய ஏழு இடங்களில் விளையாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெறவுள்ளது. 

உலகக் கோப்பைக்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது, இரண்டு போட்டி நாட்களுக்கான  டிக்கெட் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. 

அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டி மற்றும் அக்டோபர் 27 அன்று சிட்னி இல் தென்னாப்பிரிக்கா-பங்களாதேஷ் மற்றும் இந்தியா -குரூப் ஏ ரன்னர்-அப் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்  இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய ஐந்து நிமிடங்களில் விற்பனை செய்யபட்டுள்ளது. உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை காண வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பே இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 45 போட்டிகளின் முன் விற்பனையில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போட்டிகளை காண 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story