போதைப்பொருள் வழக்கில் நவ்தீப்பிடம் விசாரணை
தெலுங்கு பட உலகில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி 30 பேரை கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில் பல கோடிகள் கைமாறியது தெரிய வந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.;
அதன்படி நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நடிகர் நவ்தீப்புக்கும் சம்மன் அனுப்பி இருந்ததால் அவரும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
நவ்தீப்பிடம் அதிகாரிகள் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார்கள். பல கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகும்படி அவரிடம் அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. நவ்தீப் தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன், இளவட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.