"சமூக வலைதளங்களின் உண்மை நிலை இதுதான்..." - ரசிகர்களுக்கு பிரியா பவானி சங்கர் அறிவுரை

நீங்கள் வாழ்க்கையில் மிகவும் பின்தங்கி விட்டதாக நினைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு பிரியா பவானி சங்கர் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2022-07-21 17:01 GMT

சென்னை,

நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி பின்னர் திரைத்துறையில் அறிமுகமானார். மேயாத மான், மாஃபியா, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது புதிய திரைப்படங்கள், பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களின் உண்மை நிலை குறித்து அறிவுரை கூறும் விதமாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "பிறரது வாழ்க்கை பற்றிய புனையப்பட்ட வடிவத்தை தான் சமூக வலைதளங்கள் உங்களிடம் வழங்குகின்றன. நீங்கள் அதில் பார்ப்பது எல்லாம் பிறரது பயணங்கள், விருந்து நிகழ்ச்சிகள், வெற்றிகள் போன்ற நல்ல விஷயங்களை மட்டும் தான். ஆனால் வலிகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது இல்லை.

எனவே சமூக வலைதளத்தில் வரும் பதிவுகளைப் பார்க்கும் போது, மற்றவர்கள் சிறந்த முறையில் வாழ்வதாகவும், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் பின்தங்கி விட்டதாகவும் நினைக்க வேண்டாம். உண்மையான வாழ்க்கை என்பது இந்த புகைப்படங்களுக்கு பின்னால் தான் இருக்கிறது" என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 



Tags:    

மேலும் செய்திகள்