சேவையால் மனங்களை வென்ற மெக்கன்சி ஸ்காட்

தனது விவாகரத்தின் மூலம் கிடைத்த ஜீவனாம்ச தொகையின் அடிப்படையில் உலகின் பணக்காரப் பெண்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்த ஸ்காட்டின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 6030 கோடி டாலர். அதனைக் கொண்டு பல தொண்டுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-11-01 05:30 GMT
லகின் பணக்கார பெண்களின் வரிசையில் மூன்றாம் இடத்தையும், மக்களின் மனதில் தனது தன்னலமற்ற சேவையால் முதல் இடத்தையும் பிடித்தவர் 51 வயதாகும் மெக்கன்சி ஸ்காட். 

இவர்  பிரபலமான ஆன்லைன் வணிக நிறுவனத்தின் அதிபரான ஜெஃப் பெசோஸின்  முன்னாள் மனைவி ஆவார்.

1993-ல் ஜெஃப் பெசோஸை திருமணம் செய்த ஸ்காட், திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் நிறுவனத்திற்கு முதுகெலும்பாகச் செயல்பட்டார். இவரது தந்தை நிதித் துறை வல்லுநர் என்பதால் ஸ்காட்டும் பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்கினார். 

மேலும் இவர் சிறந்த நாவலாசிரியர். 6 வயதிலேயே புத்தகம் எழுதத் தொடங்கினார். ஸ்காட் எழுதிய முதல் புத்தகம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட போதும், துவண்டு போகாமல் தொடர்ந்து நாவல்கள் எழுதி தனது 36-வது வயதில் அமெரிக்காவின் சிறந்த நாவலாசிரியருக்கான விருதை 2006-ல் பெற்றார். 

இந்த விருதினை பெறும்போது அவர் 4 குழந்தைகளுக்குத் தாய் என்பதும், அதில் ஒரு குழந்தை சீனாவிலிருந்து தத்தெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சாதிப்பதற்கு வயதும், சூழ்நிலையும் தடையில்லை என்பதை மெக்கன்சி ஸ்காட் நிரூபித்தார்.

மனம் தளராத ஸ்காட்
25 ஆண்டுகள் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த மெக்கன்சியின் வாழ்க்கை கடந்த 2019-ல் விவாகரத்தின் மூலம்  திசை மாறியது. அதை எண்ணி மனம்  தளராத ஸ்காட் தனது கவனத்தை முழுவதுமாக ஏழைகளின் மீது திருப்பினார். 

தனது விவாகரத்தின் மூலம் கிடைத்த ஜீவனாம்ச தொகையின் அடிப்படையில் உலகின் பணக்காரப் பெண்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்த ஸ்காட்டின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 6030 கோடி டாலர். அதனைக் கொண்டு பல தொண்டுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடி போய் சேவை செய்த ஸ்காட் 
கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு  உதவும் வண்ணமாக பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கினார். 

இதுவரை அவர் 386 தொண்டு நிறுவனங்களுக்குத் தாமாக முன்வந்து  சுமார் 6.7 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 50 கோடி ஆகும்.

தனி மனிதராக இருந்து தன்னலமற்ற சேவையை மக்களுக்கு ஆற்றியதால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, தன் சேவையை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். 

மேலும் செய்திகள்