காதலித்தவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

குன்னத்தூர் அருகே காதலித்தவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-12 22:45 GMT
குன்னத்தூர்,

குன்னத்தூர் அருகே உள்ள ஆதியூர் நிலா வீதியை சேர்ந்தவர் கிட்டுசாமி. இவர் அப்பகுதியில் தபால் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் சசிரேகா (வயது 22). பிசியோதெரபி முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்து, காதலரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவருடைய பெற்றோர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சசிரேகா மன வேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சசிரேகா இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்