வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை.

Update: 2021-10-01 10:56 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கீழானூர் பிரேம், மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேந்தன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக அதிகத்தூர் பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இதுவரை பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இனிமேலும் காலதாமதம் செய்யாமல் வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்