கலெக்டர் அலுவலக மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி

மதுரை கலெக்டர் அலுவலக 4-வது மாடியில் ஏறி மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-10-04 21:32 GMT
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலக 4-வது மாடியில் ஏறி மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் கைகளை இழந்த வாலிபர்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கியதால் இரு கைகளையும் இழந்தார். அதனால் வேலை இழந்த அவர் தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார்.
அப்போது அவரது உறவினர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த பிரவீனா என்பவர் அறிமுகம் ஆனார். அவர் ஆன்லைனில் வர்த்தகத்தில் பண முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி ராம்குமார் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் முதல் இரு மாதங்களுக்கு ரூ.36 ஆயிரத்தை பிரவீனா வழங்கிய நிலையில் மீதி தொகையை வழங்காமல் ஏமாற்றி உள்ளார்.
 கந்து வட்டி புகார்
மேலும் ராம்குமார் தன்னுடைய பணத்தை கேட்ட போது அவர் மீது கடம்பூர் போலீசில் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக பிரவீனா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராம்குமார் உள்ளிட்ட 14 பேர் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
மாற்றுத்திறனாளியான தன்னுடைய பணத்தை ஏமாற்றி தன் மீது கந்து வட்டி புகார் கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்ெகாலை முயற்சி

 எனவே நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த ராம்குமார் நேராக அங்குள்ள 4 மாடியில் ஏறி நின்று கீழே குதிக்க போவதாக கூச்சல் போட்டார். மேலும் அவர் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, தன்னுடைய பணத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ராம்குமாரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று நைசாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து தற்கொலை முயன்ற ராம்குமாரை தல்லாகுளம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மாற்றுத்திறனாளி வாலிபர் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
----

மேலும் செய்திகள்